Ads Area

கல்முனை காதி நீதிபதிக்கும் மனைவிக்கும் விளக்கமறியல் - பராமரிப்பை செலவை பெற்றுத்தர மாதாந்தம் இலஞ்சம்.

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமை (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் வழக்கு ஒன்றிற்காக ரூபா 2,300 பணத்தை இலஞ்சமாக கேட்கப்படுவதாக முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.


விவகாரத்து பெற்ற பெண் ஒருவர் குறித்த காதி நீதிமன்றம் ஊடாக தனது முன்னாள் கணவரிடமிருந்து 3 குழந்தைககளுக்கும் மாதாந்தம் வழங்கப்படும் பராமரிப்புச் செலவை பெறுவதற்காக மாதாந்தம் ரூ. 300 இனை இலஞ்சமாக கோரப்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில் தற்போது மாதாந்தம் பெறும் பராமரிப்புச் செலவான ரூ. 18,000 இனை அதிகரித்து வழங்குவதற்காக ரூ. 2,000 மற்றும் மாதாந்தம் பெற்று வந்த ரூ. 300 இனையும் வழங்குமாறு குறித்த காதி நீதிமன்ற நீதவான் மற்றும் மனைவி ஆகியோர் தெரிவித்ததாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.


குறித்த முறைப்பாட்டிற்கமைய மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.


இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 2300 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததுடன் சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை (19) கல்முனை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் மன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இதன்போது கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார்.


கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 2023 மார்ச் 01ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.


காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe