தில்சாத் பர்வீஸ்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு, ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள், பணம் மற்றும் வாகனம் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த (21) வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாவட்டம், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ராகம பகுதியைச்சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உஹனை பகுதியைச்சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 8 கிலோ 168 கிராம் ஹெரோயின், 666 கிராம் ஐஸ் போதைப்பொருள், ரூபாய் 8 இலட்சத்தி 23 ஆயிரம் (823,000) பணம், மின்னணு தராசு 03, கையடக்கத்தொலைபேசி 04, வாகன போலி எண் தகடுகள் 06, கார், வேன், முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்டநடவடிக்கைக்காக பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மாஅதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில், அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வுப்ப்பிரிவுப் பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.