Ads Area

நாங்கள் அரசியல் ரீதியாக வேறுபட்டாலும் சம்மாந்துறையின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம்.

அன்சார் காசீம்.

சம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளமை இதுவே முதற்தடவையாகும். அந்த வகையில் நானும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள கலாநிதி இஸ்மாயில் அவர்களும் வெவ்வேறான கட்சிகளைச் சேர்ந்த அரசியல் ரீதியாக வேறுபட்ட துருவங்களாக இருந்தாலும் சம்மாந்துறையின் அபிவிருத்திக்காகவும், மக்களின் தேவைகளுக்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம். இந்த அரசியல் தலைமைகளின் வழிகாட்டலுடன் ஒருங்கிணைந்த அடிப்படையில் சம்மாந்துறையின் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் தங்களின் ஒத்துழைப்பினை வழங்குவது மிகவும் அவசியமாகும். என சம்மாந்துறை பிரதேசஒருங்கிணைப்புத் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 



இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மட் ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதித தலைவர் வீ. ஜெயச்சந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – மாகாண சபைத் தேர்தல் தொகுதிக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையானது சிறுபான்மை இன மக்களுக்குச் செய்த ஒரு சதியாகும். பழயை விகிதாசார முறையில் தேர்தல் முறையானது சிறுபான்மை இனமக்கள் சிதறி வாழ்ந்தாலும், சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவத்தை அந்தந்த மாவட்டங்களின் உறுதி செய்யக்கூடிய வகையில் அமைந்திருந்தது. இந்த புதிய தேர்தல் முறையானது அந்த நிலைமையை இல்லாமற் செய்து பிரதேசவாத்தையும், இனவாத்தையும் பல்வேறு முரண்பாடுகளையும் தோற்றுவிக்ககூடிய வகையில் அமைந்துள்ளது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையினை பார்க்கின்ற போது முஸ்லிம் மக்களுடைய உரிமை மறுக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. அந்தவகையில் இந்த புதிய தேர்தல் முறை எங்களுடைய உரிமையை மறுக்கின்ற ஒரு தேர்தல் முறையான இருக்கின்றது. இதற்கான எதிர்ப்பினை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தின் எல்லை நிர்ணமானது பெரும்பான்மையினருக்கு சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக சம்மாந்துறை தொகுதிக்கான எல்லை நிர்ணயமானது மிகவும் துரோகத்தனமாக செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சம்மாந்துறைக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரையோ தெரிவு செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைமையுள்ளது. முஸ்லிம்கள் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை தனித்தொகுதியில் உறுதிசெய்ய முடியாத வகையில் இந்த எல்லை நிர்ணயம் அமைந்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம். 

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவிக்கையில் – கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியானது முக்கியமானதாகும். இன்று ஒரு பக்கம் நாங்கள் எங்களுடைய அரசியல் உரிமையை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றதோடு, மறுபக்கத்தில் அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. 

நானும், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதன் காரணமாக இந்த சம்மாந்துறையின் அபிவிருத்திக்காகவும் மக்களின் தேவைகளுக்காகவும், எதிர்கால சந்ததிகளின் நலனுக்காகவும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியுள்ளது. நீண்டகால பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பேசி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூலம் எமது எதிர்கால சந்ததினர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

எமது பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையோடு சிந்தி செயற்பட்டால் நிலையான அபிவிருத்தியினை மேற்கொள்ளலாம். அதற்காக அரசியல் தலைமைகளோடு இணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.

2018 ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம் உட்பட 75 வேலைத்திட்டங்களுக்கு 30.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதுடன், .இவ்அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும், 40 வீட;டுத்திட்டப் பகுதியில் உள்ளுர் சுற்றுலா மையமொன்றை ஏற்படுத்தல் போன்றவை இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் சம்மாந்துறைப் பற்று பலநோக்குச் கூட்டுறவுச் சங்க காணியில் சம்மாந்துறைக்கான நவீன பஸ் தரிப்பு நிலையம் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டது.

காணிப்பிரச்சினை, பாடசாலைகளின் அபிவிருத்தி, வீடமைப்பு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி, தபாலக அபிவிருத்தி, விளையாட்டு மைதான அபிவிருத்தி, மணல் அகழ்வு பிரச்சினை மற்றம் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe