அன்சார் காசீம்.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மூலம் செயற்படுத்துகின்ற ‘சிப்தொர புலமைப்பரிசில்” வழங்கும் நிகழ்வு அண்மையில் செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உரையாற்றுகையில்- - வறிய மக்களை தட்டியெழுப்பி அவர்களது வாழ்வினை மேம்படுத்தி அவர்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு அரசாங்கம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்தி தங்களது வாழ்வினை முன்னேற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டு நாட்டினையும் வறுமையற்ற நாடாக முன்னேற்ற வேண்டும்.
சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களின் திறமை மற்றும் தகுதிகள் உள்ள மாணவர்கள் நிதி ரீதியான கஷ்டங்கள் காரணமாக உயர்கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தவிர்த்து அவர்களை அதன்பொருட் ஈடுபடச் செய்யும் நோக்கில் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. மாணவர்களை இதனைக் கொண்டு தங்களது கல்வியினை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, உயர்தரக் கல்வியில் ஈடுபட்டுவரும் வறிய மாணவர்களுக்கு இது மிகப்பெரும் நிவாரணமாகும். இப்பணத்தை தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யாமல் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய வேண்டும். என்றார்.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 34 தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப்பரிசிலுக்கான காசோலை, சான்றிதழ் என்பன பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.. ஒவ்வொரு மாணவர்களுக்கும் மாதாந்தம் 1500ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை பிரதேச உதவிச் செயலாளர் எம்.எம். ஆசீக், சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், கணக்காளர் திருமதி ஸீசைனா, பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்.எம்.எம்.சுல்பிகார், சம்மாந்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்