முஹம்மட் அமீன்.
SLACS பரீட்சையில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த மிகப் பெரும் துரோகம் : யார் இதனை தட்டிக் கேட்பது.?
சாத்தியம் இல்லாததையே சாத்தியமாக்கிய பரிட்சை திணைக்களமும் சாமர்த்தியமாய் காய் நகர்த்திய பொதுச் சேவை ஆணைக்குழுவும்.
அரச கணக்காளர் தரம் iii க்கு இணைத்து கொள்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரிட்சை 2016 (2018).
இலங்கையில் முன்நிலைப்படுத்தப்பட்ட 15 வகையான சேவைகளில் இலங்கை கணக்காளர் சேவையும் (SLACS) ஒன்று.
இது இறுதியாக 2016 நவம்பர் 04 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு 2017 ஏப்ரல் மதம் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சை முடிவடைந்து சாதாரணமாக 05 அல்லது 06 மாதங்களில் வெளியாகின்ற பெறுபேறு சுமார் 07 மாதங்கள் கழிந்தும் வெளியாகாத நிலையில் பரீட்சை திணைக்களத்தால் எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில் கல்வியமைச்சர் 24 .11 .2017 ம் திகதி கலந்துகொண்ட நிகழ்வொன்றில் குறித்த பரீட்சை இரத்துசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும் கல்வியமைச்சரின் அறிவித்தலை தொடர்ந்து பத்து நாட்களின் பின் பரீட்சை திணைக்களத்தால் உத்தியோகப்பூர்வமாக குறித்த பரீட்சை இரத்துசெய்யப்பட்டதாகவும் அடுத்துவரும் ஜனவரி 2018 இல் மீளநடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலே குறித்தபடி ஜனவரி 2018 இல் பரீட்சை இடம்பெற்றதோடு யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான கோணத்தில் வினாப்பத்திரங்கள் அமைந்திருந்தது. பரீட்சை முடிந்து வெளியான பரீச்சார்த்திகளில் அநேகமானோர் (தமிழ் , சிங்கள மொழி மூலமான) கடினமாக உணர்ந்த போதிலும் சில தமிழ் மூலமான பரீட்சார்த்திகள் உறுதியான நம்பிக்கையோடு வீடு திரும்பினர்.
இதில் ஆதாரம் , முறையான காரணம் இன்றி பரீட்சை இரத்துசெய்யப்பட்டமை, 07 மாதங்களின் பின் முடிவுகளை வெளியிட இருக்கும் தருவாயில் பரீட்சை இரத்துசெய்யப்பட்டமை, அதிகாரிகளின் இடைநிறுத்தம் மற்றும் இடமாற்றம், மீட்டுவதற்கு கால அவகாசம் வழங்காமை, பாட அலகுகளை விஞ்சிய வினாக்கள், 2000 க்கும் குறைவான பரிட்சார்த்திகளின் முடிவுகளை வெளியிட 09 மாதங்கள் எடுத்தமை, திறந்த போட்டிப்பரீட்சை ஒன்றில் 99.2 % சிங்கள மொழி பரிட்சார்த்திகள் மட்டுமே சித்தியடைந்தமை ( மும்மொழியிலும் பரீட்சைக்கு தோற்றியிருந்தும் ), தெரிவுசெய்யப்படாதோரின் பெறுபேறுகளை வெளியிடாமல் மறைக்கின்றமை, நாட்டின் காணப்படுகின்ற அசாதார நிலையில் யாரும் எங்கும் இது தொடர்பாக பேசமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் முடிவுகளை வெளியிட்டமை போன்ற முடிவடையா சந்தேகம்கள் இப்பரீட்சையில் மோசடி இடம் பெற்றுஇருப்பதனை உறுதிப்படுத்த வலுச்சேர்க்கின்றதோடு கடந்த 3 ஆண்டு நல்லாட்சி அரசாங்கதில் இடம்பெற்ற பாரிய பரிட்சை மோசடியாக சித்தரிக்கப்படுகின்றது.
இதற்க்கு மேலதிகமாக கடந்த 2014 ம் ஆண்டு இடம்பெற்ற பரீட்சையின் 96 பேரை தெரிவு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வெட்டுப்புள்ளி 365 ஆகும். அதே போல் இம்முறையும் 120 பேரை தெரிவு செய்யும் போதும் வெட்டுப்புள்ளி 365 ஆகவே அமைந்துள்ளது. இதனை உற்றுநோக்கினால் சாதாரணமாக இடம்பெறக்கூடிய ஒன்றல்ல. ஏனனில் மும்மொழியிலும் ஆயிரக்கணக்கானோர் தோற்றும் இப்படியானதொரு போட்டிப்பரீட்சையில் அடுத்தடுத்து இரு தடவைகள் ஒரே மாதிரியான வெட்டுப்புள்ளி அமைவது இயற்கையாக இடம்பெற்றது அல்ல. மாறாக வெட்டுப்புள்ளியான 365 ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஏற்றாப்போல் குறித்தசில பரிச்சதிகளின் புள்ளிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவே இப்பரீட்சையில் மோசடி இடம்பெற்றுஇருப்பதற்கான முக்கியமான சான்றாகும்.
எனவே எமது தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, வழக்கறிஞர்களே , மனித உரிமை ஆர்வலர்களே, இவ்வாறான அநீதிக்கெதிராக குரல் கொடுத்து எமக்கில்லவிடினும் எதிர்காலத்தில் எமது தமிழ் பேசும் சமூகத்தின் இருப்பினை உறுதிப்படுத்த உதவுமாறு வேன்டுகின்றோம்.
மேலதிக தகவல்களை பெறவும், ஆலோசனை வழங்கவும் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
H.M. Ameen 0777423297
A. Kaamil Aasath 0772674070
S.T. Kumar 0779574393