பள்ளிவாசல்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாதி புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான் இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதில் அவர் பேசியதாவது...
பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எம்பிக்கள் பணியாற்றுவார்கள். சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்.
அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் பேசினார்.