Ads Area

கைது செய்யப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியரிடம் மன்னிப்புகோர தயார்: காவிந்த ஜயவர்தன.

கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுமானால் அவரிடம் மன்னிப்பு கோருவதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சிங்களத் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குருணாகலையில் கைதுசெய்யப்பட்டுள்ள வைத்தியரை பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகள் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். அவர் குற்றமிழைக்கவில்லை என்பது விஞ்ஞானபூர்வமான விசாரணைகள் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மாறாக அவர் நல்லவர், வல்லவர் என வாய்மூலம் அறிவிப்புக்களை விடுப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. குறித்த வைத்தியருக்கு எதிரான படுபயங்கரமான குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும், அதிகாரிகளுக்கும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டும். இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கவே கூடாது. அத்துடன், அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படும் என அரசியல்வாதிகள் அழுத்தங்களையும் பிரயோகிக்க கூடாது.

என்ன நடந்தாலும், எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நாம் அதிகாரிகளின் பக்கமே நிற்போம். எனவே, துணிகரமாக விசாரணைகளை நடத்திய உண்மைகளை கண்டறியுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குற்றவாளிகளுக்கு எவரும் வெள்ளையடிப்பு செய்யக்கூடாது.

முதலில் விசாரணைகளை நிறைவடையட்டும். வைத்தியர் குற்றமிழைக்கவில்லை. எமது தரப்பில்தான் தவறிழைக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுமானால் நாம் மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டோம் என காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe