அரசுக்கு பலத்தை காட்டும் நேரம் வரும் : பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் காரைதீவில் எச்சரிக்கை !!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசினால் வழங்கப்பட்ட நியமனத்தில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டத்தை கண்டித்து இன்று காலை காரைதீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விபுலானந்த சதுக்கத்தில் ஒன்று கூடிய வெளிவாரி பட்டதாரிகள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டு விபுலானந்த சுற்றுவட்டத்தில் பேரணியாக சென்றனர்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலையில்லா பட்டதாரிகள்,
கடந்த சந்திரிக்கா அம்மையார் காலத்தில் 45000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது , மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் 70000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பலவகையான நியமங்கள் வழங்கப்பட்டது. அதில் எந்த அரசாங்கமும் உள்வாரி, வெளிவாரியென எந்த பாகுபாடும் காட்டியதில்லை.
156 நாட்களுக்கு மேலாக நாங்கள் போராடிய போது எங்களுக்கு இந்த அரசினால் தந்த வாக்குறுதி இப்போது புஸ்வானம் ஆகியுள்ளது. எங்களை இவர்கள் நிராகரித்து புறந்தள்ளிவிட்டு இந்த நியமனங்கள் வழங்க காரணம் என்ன? எங்களை மன ரீதியாக பாரிய உளைச்சலுக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது.
எங்களுக்கான நியமனத்தை இந்த அரசாங்கம் உடனடியாக வழங்க முன்வர வேண்டும். இல்லாது போனால் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தேர்தல்களில் நாங்கள் எங்களுடைய பலத்தை காட்டவேண்டிய சூழ்நிலை உருவாகும். கௌரவ பிரதமர் உடனடியாக எங்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றனர்.
நூருள் ஹுதா உமர்.