Ads Area

மேம்படுத்தவேண்டிய பள்ளிவாயல் உள்ளகச் சூழலும் சமகால இளம் தலைமுறையும்.

Ihshan J.M.I Mohamed

எனது சிறுவயதில் பலமுறை பள்ளிவாயலில் முதல் வரியில் தொழுவதற்கு நின்ற பொழுதுகள் இரண்டாம் வரிக்கு தொழ நிற்குமாறு கட்டாயப்படுத்தி பணிக்கப்பட்டேன். நான் மட்டுமல்ல என்னை போன்ற பல சிறார்களின் நிலை இவ்வாறே. காரணம் குறும்புத்தனம் செய்வார்கள் என்ற நோக்கத்தில்... இதன் காரணமாக பள்ளிவாயலுக்கு செல்வதில் வெறுப்புகள் உண்டான சந்தர்பங்கள் அநேகம்.

ஆனால் தற்காலங்களில் அவ்வாறு இல்லை. காலமும் காலத்து மனிதர்களும் அவர்களின் சிந்தனையும் மாறிவிட்டதை அநேக சந்தர்ப்பங்களில் பெரும்பாலான பள்ளிவாயல்களில் காணக்கிடைக்கின்றது. பள்ளிகளில் முதல் வரிசையில் பல சிறார்களின் செல்வாக்கை காணமுடிகிறது. இன்னும் எங்களில் பலர் சிறுவர்களை பள்ளிவாயளிற்கு கொண்டு வந்து பழக்குவதை கூட காணக்கிடைக்கிறது. உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனாலும் சிறார்கள் தொழுகைக்கு மட்டுமே பள்ளியை நாடுகிறார்கள் என்பது ஒரு துரதிஸ்டவசம் தான்.

அவ்வாறே இன்று ஒரு பள்ளிக்கு சென்று இருந்தேன். நான் நீண்டநாள் கண்ட ஆசைகளில் ஒன்று ஒருகணம் நடைபெற்றது போன்ற ஒரு திருப்தி; அதுதான் மஸ்ஜித் வாசிகசாலை (Mosque Library).

மூதூர் அரபா நகர் பள்ளிவாயலில் மஸ்ஜித் வாசிகசாலை ஒன்றின் சிறுபகுதி அமைப்பை கண்டேன். உண்மையில் நவீன சிந்தனையின் ஆரம்ப வாடை கிராமப்புறம் ஒன்றில் நுகர்ப்படுவதைக் கண்டு ஆச்சரியமுற்றேன். இதைப்போன்று இன்னொமொரு ஆசையும்... பள்ளிவாயல் பாலர் பிரிவு (Mosque Child Section) நிர்மாணம்.

சமகால உலகில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்று மானிடவியல் இடைத்தொடர்பு வலுவின்மை. இயக்கவேறுபாடுகள் அப்பால் எமது ஒற்றுமையையை தொலைத்துவிட்டு சமூக ஒற்றுமை பற்றியும் அதனை எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பது பற்றியும் முட்டைக்குள் இருந்து யோசித்து செயற்படுத்த முனைகின்றோம்... இதைவிட பெரும் வேடிக்கை ஒன்று இந்த சமூக அரங்கில் இன்னும் நிகழத்தான் செய்கிறது. அது பற்றி பேச இந்த இடம் பொருத்தமில்லை என்று எண்ணுகிறேன்.

எந்தவொரு சமூகத்திலும் காணப்படாத ஒரு சமூகவியல் ஒன்றுகூடல் தளத்தை நாளொன்றுக்கு 5 வேலை அதுவும் காலம் வகுக்கப்பட்ட நேர இடைவெளியில் பேணுவதோடு இவற்றுக்கு அப்பால் வாரமொருமுறை ஜும்ஆ என்ற நோக்கில் ஒருங்கிணையும் நாம் அவற்றை முறையாக பயன்படுத்துகின்றோமா???? என்றால் நிச்சயமாக இல்லை என்று கூறலாம்.

சிறுவர்களை பள்ளிவாயல் பக்கம் கவரும் செயல்திட்டங்களில் ஒன்றே நான் மேற்கூறிய எனது இரு ஆசைகள். பள்ளிவாசல் நூலகமும் பள்ளிவாசல் சிறுவர் பொழுதுபோக்கு பிரிவும். மேற்படி இரு செயற்பாடுகள் ஊடாக சிறுவர்களை பள்ளிவாயல் சார்ந்து ஒரு வலுவான பிணைப்பையும் கவர்சியையும் உண்டாக்கிடலாம்.

அத்தோடு பள்ளிவாயல் நூலகத்தில் ஆய்வு சார் நூல், சிறுவர் கதை நூல்கள், அறிவியல் சார் சிறுவர் புத்தகங்கள் மற்றும் மார்க்கம், வரலாறு சார்ந்த புரட்சிகர நூல்களை கொண்டு அமைக்கவேண்டும். இவற்றுக்கு மேலாக சிறுவர் பகுதியில் விளையாட்டு உபகரணம், Computer, இன்டர்நெட், WiFi பாவனை போன்றவற்றை வழங்கிட வசதி செய்துகொடுக்க வேண்டும்.

இதனூடாக தட்டச்சு செய்யப் பழகுதல் (Typing), ஆவணத் தயாரிப்பு (Document Creations), ஒன்லைன் தேடல், பகுப்பாய்வு (Online Data Analysis), தரவுகளை பதிவிறக்கம் (Download), அதனை பிரதி எடுத்தல் (Print Out), இஸ்லாம் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வு காணொளி (Video) காட்சிப்படுத்தல் போன்ற நவீனத்துவ கற்றல் வழிமுறை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்.

இதனூடாக பல வசதியற்ற மாணவர்கள் நவீனத்துவ கற்றல், தேடல் இலகுவாக்கப்படுவதோடு பள்ளிவாயலை சார்ந்து பொழுதுபோக்கு சமூகம் தோற்றம் பெற வாய்ப்பாகும். அத்தோடு பள்ளிவாயல் ஒருவகை நேர் அலைவுகளை (Positive Vibration) கொண்ட சூழல் ஆகையினால் பல உளவியல் சார் நேர் சிந்தனையை இலகுவாக விதைக்க முடியும்.

“அவர்களை எதிர்ப்பதற்கென உங்களால் முடிந்த அளவு அதிகமான வலிமையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள்!” (அல்-குர்ஆன் 80:60)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe