Ads Area

தடையை மீறி டியூசன் வகுப்புக்கள் நடாத்தியோர் மீது சம்மாந்துறைப் பொலிஸார் நடவடிக்கை.

காரைதீவு பிரதேசத்தில் விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தவேண்டாமென்று தவிசாளர் கே.ஜெயசிறில் விடுத்த உத்தரவைமீறி டியுசன் நடாத்திய நிலையங்களுக்கு சம்மாந்துறைப் பொலிசார் திடீர் பாய்ச்சலை நடாத்தியுள்ளனர்.

தொடரும் மழை மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளையேற்று விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளை தடைசெய்யுமாறு டியுசன் ஆசிரியர்களிடமும் நிலையங்களிடமும் எழுத்துமூல அறிவித்தல் தவிசாளரால் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதனை பெரும்பாலானோர் ஏற்றிருந்தும் ஒருசில ஆசிரியர்கள் அவ்வுத்தரவை மீறி வகுப்புகளை நடாத்தியதையறிந்து தவிசாளர் கே.ஜெயசிறில் சம்மாந்துறைப் பொலிசில் முறையிட்டதோடு சட்டநடவடிக்கையும் எடுக்கத் தீர்மானித்திருந்தார்.

தவிசாளரின் முறைப்பாட்டையடுத்து பொலிசார் நேற்று முன்தினம் குறித்த ரியுசன் நிலையங்களுக்குச்சென்று விசாரணை நடாத்தியதோடு அவர்களது வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர்.

குறித்த ஆசிரியர்கள் தொடர்பாக வலயக்கல்விப் பணிமனையில் தெரிவிக்கவிருப்பதாகவும் பொலிசார் கூறிச்சென்றுள்ளனர். அவர்கள் அத்தோடு ரியுசன் வகுப்புகளை மூடியுள்ளதாகத் தெரிகிறது.

மக்களுக்காகவே மக்களின் வேண்டுகோளையேற்று தான் இப்படியான முற்போக்கான செயற்பாடுகளில் ஈடுபடும்போது ஆசிரியர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று தவிசாளர் கே.ஜெயசிறில் கூறினார்.

சில ஆசிரியர்கள் ஒவ்வொருவருடமும் அனுமதிக்கட்டணம் மற்றும் தளபாடப்பணம் அறவிடுவதாகவும் நியாயமற்றமுறையில் மனிதாபிமானத்திற்கு அப்பால் கூடுதல் பணம் அறிவிடுவதாகவும் உரிய இருக்கைவசதிகள் இல்லாமல் தரையிலும் நுளம்புக்கடிக்கு மத்தியிலும் வகுப்புகள் நடாத்தப்படுவதாக தன்னிடம் பல பெற்றோர்கள் முறையிட்டுள்ளதால் விரைவில் அவர்களை அழைத்து ஒருசீரான முறையில் ஒழுங்குபடுத்தவிருப்பதாகவும் இணங்காதவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுப்பதோடு எமது லைசன்ஸ்சும் முடிவுறுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

(சகாதேவராஜா - காரைதீவு குறூப் நிருபர்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe