(பாறுக் ஷிஹான்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருதுவில் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (9) அதிகாலை பெற்றோல் கலனுடன் திடீரென வீட்டினுள் உட்புகுந்த நபர் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை அழைத்து அவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த குறித்த பெண் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இன்று (13) அதிகாலை உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது-6 ரீ.எம் வீதியை சேர்ந்த கலந்தர் லெப்பை கமருன் நிஸா (42) என்ற 7 பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்து பொலிஸாரினால் கைதான சந்தேக நபரான இப்றாகீம் உதுமாலெப்பை நிசார் (48) என்ற குடும்பஸ்தர் இறந்த பெண்ணின் முன்னாள் கணவராவார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட; இருவரும் தம்பதி எனவும் ஒரு வருடத்துக்கு முன்னர் விவாகரத்து செய்த பின்னர் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகளை சந்தித்ததுடன் தாபரிப்பு பணம் செலுத்திய விடயத்தில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.