நடிகர் ரஜினிகாந்த் 2002 -ம் ஆண்டு முதல் 2005-ம் நிதியாண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில் குறைபாடு இருப்பதாக வருமானவரித்துறை குற்றம் சுமத்தியிருந்தது. இதற்காக 2002-03-ம் ஆண்டுக்கு 6,20,235 ரூபாயும், 2003-04ம் ஆண்டுக்கு 5,56,326 ரூபாயும், 2004-05ம் ஆண்டுக்கு 54,45,875 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை ரஜினி, தன்னுடைய பணத்தில் வட்டிக்குவிடும் தொழில் செய்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பாயத்தில் வரி குறைபாடு தொடர்பாக ரஜினி தரப்பு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் விளக்கத்தில், ‘ 2002-03ம் நிதியாண்டில் 2,63,00,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அதில் 1,45,000 ரூபாய் வட்டி வந்தது. இதன் வரி முறையாகச் செலுத்தப்பட்டுவிட்டது. 2004-05ம் நிதியாண்டில் வட்டிக்கு வழங்கிய 1,71,00,000 ரூபாய் வசூலாகவில்லை. இதனால் தனக்கு 33,93,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு ரஜினி விளக்கமளித்ததாகக் கூறப்படும் தகவலில், `பொருளை அடமானம் வைத்து பணம் தருவதையே நான் வட்டித் தொழில் என நினைத்திருந்தேன். நான் எனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தைக் கடனாக வழங்கினேன். இது எப்படித் தொழிலாகும். நான் இதை வியாபாரமாகச் செய்யவில்லை. வட்டிக்குப் பணம் தருவது என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். நான் அப்படி எந்தத் தொழிலும் செய்யவில்லை’ என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதை ஏற்றுக்கொண்ட வருமானவரித்துறை, ரஜினி மீதான வழக்கை வாபஸ் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.