நூருல் ஹுதா உமர்.
அணுவாயுதங்கள், யுத்த கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதங்கள் என்று என்னவெல்லாம் கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் எல்லாவற்றையும் செய்துவிட்டு இன்னும் கோரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை. அதிகமான விஞ்ஞானிகள் மனிதர்களை கொல்லும் விடயங்களையே கண்டுபிடிக்கிறார்கள். எதிர்காலம் வித்தியாசமான கோணத்தில் நகர்கிறது.என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச ரீதியாக சாதனை படைத்த மாணவி பாத்திமா ஷைரின் இனாம் மெளலானாவை பாராட்டும் விழாவில் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.
தனது உரையில் மேலும்,
ஒரு பிரதேசத்தில் முதலாவது சாதனை படைப்போரை வரலாற்றில் பதிந்து விடுகிறோம். அப்படி முதலாவது எனும் சிறப்பு அந்தஸ்தை பெற எத்தனிக்கும் யாரையும் நாம் குறுகிய வட்டத்தினுள் சுருக்க கூடாது. கடந்த காலங்களில் சகலரும் சிறப்பாக கல்விபயில பல வழிமுறைகளை முன்னாள் மந்திரிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். புதிய சிந்தனையாளர்களும், புதிய கண்டுபிடிப்பாளர்களும் அடையாளப்படுத்தப்பட்டு ஊக்கமளிக்க நாம் முன்வரவேண்டும். பசுமையான எண்ணங்கள், முறையான சிந்தனைகள் சரியான எதிர்காலத்தை முன்னிறுத்தும்.
நாம் இப்போது வசிக்கும் இந்த பிரதேசங்கள் ஒரு காலத்தில் எப்படி இயற்கை அழகுடன் இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குளிர் பிரதேசங்கள் கூடிய அமெரிக்கர்கள் கட்டுவது போன்று எமது பிரதேசத்தில் ஒரு காலத்தில் அமெரிக்கன் வடிவம் என ஒரு வீட்டை கட்டுவார்கள். வெப்ப நிலை கூடிய எமது நாட்டுக்கு அறவே பொருத்தமில்லாத அந்த வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாது. அவர்களின் தேவைக்கு அவர்கள் உருவாக்கியதை நாம் புதிய நாகரிகமாக இங்கு பின்பற்றினோம்.
கொங்கிரீட், சிமெந்து கல் என உஷ்ணத்திலையே நமது வாழ்க்கை கடக்கிறது. இப்போது வீதிகளுக்கும் கொங்கிரீட் இடுவது மட்டுமின்றி மேலால் காபட்டும் இடுகிறார்கள். மரத்திற்க்கு பதிலாக இரும்பை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். இறைவன் தந்த சகல இயற்கை வளங்களையும் நாம் முறைதவறி பயன்படுத்தியுள்ளோம் என்றார்.