கொரோனா போர்வையில் பெற்றி கெம்பஸ் அபகரிப்பு;
* கல்முனை மாநகர முதல்வர் றகீப் பலத்த கண்டனம்..!
* அரசின் சூழ்ச்சியை முறியடிக்க கிழக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அறைகூவல்..!
கொரோனா பரிசோதனை என்ற போர்வையில் பெற்றி கெம்பஸை முறையற்ற விதத்தில் அரசு கையகப்படுத்தியிருப்பதை வன்மையாக கண்டித்துள்ள கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க இன, மத பேதங்களுக்கப்பால் கிழக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இந்நிலையில், கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையடுத்து, இனவாதிகள் பெற்றி கெம்பஸை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி, பாரியளவில் எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததை முழு நாடும் அறியும். இப்பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் அல்லது அரசு சுவீகரிக்க வேண்டும் என்று இனவாதிகள் இன்றும் வலுயுறுத்தி வருகின்றனர்.
நாடு தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அத்தகைய இனவாதிகளை திருப்திப்படுத்தும் வகையிலும் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கிலுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கருதுகின்றோம். நாட்டில் எத்தனையோ இடங்கள் இருக்கத்தக்கதாக இந்த கெம்பஸை ஆக்கிரமித்து, கொரோனா பரிசோதனை நிலையமாக செயற்படுத்துவதன் மர்மம் புரியாமல் இல்லை.
ஒரு தனியார் நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதென்றால் சில ஒழுங்கு, விதிமுறைகள் இருக்கின்றன. அவை எதுவும் பின்பற்றப்படாமல், கொரோனா பரிசோதனை நிலையமாக பயன்படுத்துவதற்கான தற்காலிக ஏற்பாடு என்ற போர்வையில் பெற்றி கெம்பஸ் அபகரிக்கப்பட்டிருப்பதானது, சட்ட ஆட்சித் தத்துவத்தை முற்றிலும் மீறுகின்ற செயலாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பெற்றி கெம்பஸின் நிறுவுநரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஓர் அரசியல்வாதியாவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பொதுஜன பெரமுனவின் கூட்டுக்கட்சியாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்கு சாதகமான நிலைப்பாட்டையே மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறு தமது அணியில் இருக்கின்ற ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் சார்பான அரசாங்கத்தினால் இந்த அநியாயம் இழைக்கப்படுகிறது என்றால், ஏனைய முஸ்லிம் தலைமைகளினதும் மக்களினதும் நிலைமை எவ்வாறு அமையும் என்பது குறித்து அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆகையினால், பெற்றி கெம்பஸ் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டத்தை உடனடியாக மீளப்பெற்று, எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தின் உயர்கல்விக்கு பங்களிப்பு செய்யக்கூடிய நிறுவனமாக பெற்றி கெம்பஸ் மிளிர்வதற்கான பயணத்தை இடையூறின்றி தொடர்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
அதேவேளை தமது இளம் தலைமுறையினருக்கான உயர் கல்வி நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கொரோனா வைரஸில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கும் கிழக்கு மாகாண மூவின மக்களும் இன, மத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். இது விடயத்தில் எத்தகைய சவால்கள் வந்தாலும், பெற்றி கெம்பஸை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஹிஸ்புல்லாஹ் பின்னிற்கக் கூடாது" என்றும் கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார்.