Ads Area

உலக புத்தக தினமும் கல்முனையின் தந்தையும்..!

அரசியல் வரலாற்று பாதையில் புதிய சிந்தனைகளுடன் நிலையான அபிவிருத்தியையும் தமிழ்,முஸ்லிம் மக்களின் உறவையும் தனது இரு கண்களாக  மதித்து செயற்பட்டவர் தான் முன்னால் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள்.  இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் "Mr.clean " என்று  புகழாரம் சூடப்பட்ட ஒர் முதன்மையான மற்றும் முன் மாதிரியான அரசியல்வாதியாவார்.

அந்த வகையில் , கலாநிதி மர்ஹூம் மன்சூரிடத்தில் பல விசேட தன்மைகள் காணக் கூடியதாக இருந்தது. நேரங்களை வீணாக கழிக்காமல் புத்தகங்களுடன் கழிப்பது,  அதில் முக்கிய  தன்மையாக காணப்பட்டது. வாழ்க்கை என்பது செல்வத்தைச் சேர்ப்பது மட்டுமே என்று அவர் நினைத்திருந்தால் பெரும்  செல்வந்தனாகியிருப்பார். மாறாக, படிப்பதும் வாசிப்பதும் அவரின் முழு நேர கவனமாக இருந்ததால் தான், சிறந்த மனிதனாகவும் சிறந்த  மக்கள் சேவகனாகவும் அவரைச் செதுக்கியது.இவர்  ஆற்றிய சேவைகளில் கல்வித் துறை சார்ந்த சேவைகள்  தனித்துவம் மிக்கவையாகும்.

"என் வாழ்க்கையில் நான் புத்தகங்களை மட்டும் தான் சேகரித்திருக்கின்றேன். வேறு எதையும் சேகரிப்பதற்கு எனது அறையில் இடமும் இல்லை"  என்று பல பாடசாலை நிகழ்வுகளில் கூறியுள்ளார்.

ஆரம்ப காலம் தொட்டு விரிவான வாசிப்புக்கு அடிமையாகிய இவர், ஒரு இளம் மாணவனாய் இப்பிரதேசத்தில் கல்வி கற்ற காலம் தொட்டு பிரதான நகரங்களில் காணப்படுவது போன்று, மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் எமது பிரதேசங்களில்  நூலகங்கள் இல்லாத நிலையை உணர்ந்து, தனது சமூகமும் பிரதேசங்களும் யாழ்ப்பாணத்தைப் போன்று கல்வியில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை கொண்டு  “ஊருக்கு ஓர் நூலகம்" என்ற திட்டத்தை, தனக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த முதற்கணமே செயற்படுத்தினார்.

முதற்கட்டமாக, கல்முனையில்,  யாழ்ப்பாண நூலகம் போன்றும் கொழும்பு பொது நூலகம் போன்றும் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்ற நோக்குடன் 1977.11.06ம் திகதி அடிக்கல் இடப்பட்டு 27.03.1981ம் திகதி பொதுமக்கள் பாவனைக்காக  கல்முனை  பொது நூலகத்தை திறந்து வைத்தார். அன்று இந்நூலகமே அம்பாறை மாவட்டத்தின் முதல் நூலகமாக காணப்பட்டது.இன்று "ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த நூலகம்"என்று அழைக்கப்படுகின்றது.

அதன் பிற்பாடு , மருதமுனை,சாய்ந்தமருது, கரவாகு மேற்கு பொது நூலகம்,நிந்தவூர், அட்டாளைச் சேனை தேசிய கல்விக்கல்லூரி மற்றும் பல பிரதேசங்களில் நூலகங்களை நிறுவியதோடு, இன்னும் பல ஊர்களில் உள்ள நூலகங்கள் , பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் புணர் நிர்மானம் செய்தார்.

இவரின் முயற்சியில் அட்டாளைச்சேனை தேசியக் கல்வியற் கல்லூரி 1992.05.01 ம் திகதி நிறுவப்பட்டது. அது மாத்திரம் அல்லாது அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் குவைத் நாட்டு இலங்கை தூதுவராக கடமையாற்றிய  காலத்தில் அந் நாட்டு அரசின் மூலம் கல்விக்காக தான் மேற்கொண்டு வந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்தினார்.

அதில் விசேடமானது  தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினூடாக சுமார் பல பில்லியன் கணக்கான  நிதியினை பல்கலைக்கழகத்தின் பல்வேறு பௌதீக வளத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவினார். இதுவே குவைத் அரசு வெளிநாட்ளுக்கு செய்த உதவியின் மிகப்பெராயதாக திகழ்கின்றது. இப் பெரும் பணிக்கு இன்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மிகவும் நன்றியுள்ளதாக இருந்து வருகின்றது.

இவ்வாறு காலத்தால் அழியாத பல சேவைகளைச் செய்த "சேவைகளின் செம்மலை" காலத்தில் அழியாத உலக_புத்தக_தினம் புடம்போட்டுக்காட்டுகின்றது.

"உன் வாழ்க்கை எனும் ஓர் அனுபவத்தை ஓராயிரம் அனுபவங்களாக மாற்றுவது புத்தகங்களாகும்" 
 - கலாநிதி ஏ.ஆர்.மன்சூர்-

Mifras Mansoor
Secretary 
A.R.MUNSOOR FOUNDATION


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe