அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் தங்களுடைய விசா காலம் முடிவடைந்து இருந்தாலும் அவர்கள் எவ்வித அபராதம் செலுத்தாமல் நாடு திரும்பலாம் என அமீரக ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹ்யான் (Sheikh Khalifa bin Zayed Al Nahyan) கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இப்படி காலாவதியான விசாவைக்கொண்டிருந்து, அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய தடை இல்லை என குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் செய்தித்தொடர்பு, அடையாள மற்றும் குடியுரிமை அதிகாரி கர்னல் காமிஸ் அல் காபி (Khamis Al Kaabi) அறிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய காபி,” விசா காலாவதியாகி, அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் அமீரகம் வர எந்தத் தடையும் இல்லை. ஆனால் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய விருப்பப்படுபவர்கள் பழைய சட்டம் வகுத்திருக்கும் விதிமுறைகளுக்குத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்” என்றார். மேலும், இத்திட்டம் இயங்கும் விதம் மற்றும் இச்சேவையைப் பெற உதவும் மையத்தினைப் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளைப் பெற, அரசின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான (Federal Authority for Identity and Citizenship) இணைய தளத்தினைப் பயன்படுத்தலாம்” என காபி வலியுறுத்தினார்.
இதுகுறித்து துபாய் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (GDRFA) இயக்குனரான மேஜர் ஜெனரல் முகமது அகமது மாரி (Major General Mohammad Ahmad Al Marri) பேசுகையில்,” இந்தப் புதிய திட்டத்தின் மூலமாக காலாவதியான விசாக்களைக் கொண்டவர்கள் பயனடைய முடியும். கொரோனா பாதிப்பிற்கு மத்தியிலும் இப்படியொரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை நம் தலைவர் எடுத்திருக்கிறார். காலாவதியான விசா வைத்திருப்போருக்கும் நாடு உதவிகளை வழங்குகிறது ” என்றார்.