Ads Area

ஒரே நாடு ஒரே சட்டத்தின் ஊடாக முஸ்லிம்களின் தனியார் சட்டங்கள் நீக்கப்பட முஸ்தீபு; முன்னாள் பா.உ.மன்சூர்.

முஸ்லிம்களின் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களை வெற்றிகொள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அவசியமாகும். நமது சமூகத்தின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கமே நமக்கான பெரும் சக்தியாகும். இந்த இயக்கத்தின் கீழ் அணிதிரள்வதன் மூலமே ஒற்றுமையின் வெளிப்பட்டைக் காணமுடியும். என முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது வெற்றிக்காக உழைத்த கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான கூட்டம் நேற்றுமுன்தினம் (22) சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – பேரினவாதத்தின் செல்வாக்கோடு புத்தெழுச்சி பெற்றுள்ள பொதுஜன பெரமுன அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைத்து நாட்டில் புதிய கலாசாரத்தை உருவாக்க முற்பட்டிருக்கின்றது. பெரும்பான்மை மக்களை மாத்திரம் முன்னுரிமைப்படுத்துகின்ற, நாட்டில் நடைமுறையிலுள்ள தனியார் சட்டங்களை ஒழிக்க நடைவடிக்கை எடுக்கப்படவுள்ளன. இதன் மூலம் முஸ்லிம்களின் தனியார் சட்டங்கள் நீக்கப்பட முஸ்தீபுகள் நடைபெறப் போகின்றன.

மேலும் அரசின் புதிய உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் வரவுள்ள தேர்தல் முறை மாற்றத்தால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமூகத்தின் உரிமை போராட்டத்தில் முதுகெலும்பாக முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாரியத்துடனும் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றது.

எனவே, நமக்கு முதலும் இறுதியுமான தெரிவு நமது தற்போதைய தலைமைத்துவமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸாகும். இந்த இயக்கத்தின் கீழ் அணிதிரள்வதன் மூலமே ஒற்றுமையின் வெளிப்பட்டைக் காணமுடியும். என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe