கொரோனா பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 12 பேர் கொண்ட இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று ஐக்கிய அமீரகத்தின் துபாயில் அவதிப்பட்டு வருகிறது.
தற்போது தங்கியிருக்கும் குடியிருப்பில் 2 மாத வாடகை பாக்கி இருப்பதால், இன்னும் இரு தினங்களில் வெளியேற்றப்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து 2019 செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் தமது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார் 52 வயதான இமாமுதீன் மீரா லெபே.
துபாயில் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என கருதி சென்றவருக்கு கொரோனா பரவல் பேரிடியாக அமைந்துள்ளது. தற்போது கடந்த இரண்டு மாதங்களாக வாடகையை செலுத்த முடியாததால் தாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் இப்போது வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பேருந்து சாரதியாக பணியாற்றி வந்த லெபே, ஒருகட்டத்தில் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்தையும் விற்றுவிட்டு, ஐக்கிய அமீரகத்தில் குடிபெயர்ந்துள்ளார்.
வாழ்க்கையில் இதுவரை வாடகை குடியிருப்பில் மட்டுமே வாழ்ந்து வந்த தமக்கு, ஆறாவது பிள்ளை பிறக்கும் வரை எந்த பிரச்சனையும் இன்றி இலங்கையில் வாடகைக்கு வீடு கிடைத்ததாக கூறுகிறார் மீரான் லெபே. ஆனால் அதன் பிறகு தமது குடும்பம் பெரிதானது, அன்றில் இருந்து வாடகைக்கு வீடு தர பலரும் மறுத்தனர் என்கிறார் அவர்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கேட்டு பலரும் ஏளனமாக பேசியதுடன், வாடகைக்கு குடியிருப்பு தர மறுத்துள்ளனர். மட்டுமின்றி சிலர் கோபத்தில் திட்டியுள்ளதாகவும் மீரா லெபே குறிப்பிட்டுள்ளார்.
இந்த கிண்டல் கேலியில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கவுமே, லெபே ஊரில் உள்ள மொத்தமும் விற்றுவிட்டு ஐக்கிய அமீரகத்தில் குடிபெயர்ந்துள்ளார்.
குடியிருக்க ஒரு வீடு, நிலையான வேலை இது இரண்டுமே தற்போதைய மிகப்பெரிய தேவை என கூறும் மீரா லெபே, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அன்றாடம் பசி போக்க உணவு கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேரா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டல் உரிமையாளர், இவர்களின் நிலை கண்டு, சில நாட்கள் இலவசமாக உணவு வழங்கியுள்ளார்.
தமது மூத்த மகளும் மகனும் வேலை தேடி வருவதாகவும், தங்களின் கவலை அதனால் மிக விரைவில் தீரும் என லெபேவின் மனைவி பாசிலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்.
https://www.khaleejtimes.com
https://www.khaleejtimes.com