ஐ.எல்.எம் நாஸிம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் ஏற்பாட்டில் பிரதமருக்கு நல்லாசி வேண்டி ஆலங்களில் விசேட பூஜைகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு சம்மாந்துறை வீரமுனைக் கிராமத்தில் நேற்றுமுன்தினம்(18) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா தலைமையிலும், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளர் அருளாந்திரம் உமாமகேஸ்வரனின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை, வீரமுனை ஶ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவிலில் பிரதமருக்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை இடம்பெற்றதுடன், வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் அறம் போதிக்கும் நீதி நூல்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.