(சகாதேவராஜா)
சம்மாந்துறை சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட வீரமுனைக் கிராமத்தில் ஆலய மதகுரு ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிழக்கில் கொரோனாத் தொற்றுக்குள்ளான முதல் இந்து மதகுரு இவராவார்.
சிறுநீரக நோயாளியான இவர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு டயலிஸ் (இரத்தச்சுத்திகரிப்பு) செய்வதற்காக சென்றவேளை அங்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் 8 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றவேளை அங்கு சம்மாந்துறை நபரொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அதே வார்ட்டிலிருந்த அவருக்கு அன்றைய சூழ்நிலை காரணமாக செய்யப்படவில்லை. அதனால் மீண்டும் 10 ஆம் திகதி சென்றவேளை அங்கு அவர் ஏற்கனவே குறித்த வார்ட்டில் இருந்தவரென்ற காரணத்தினால் முதலில் பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
உடனடியாக அவரை கொழும்பு ஜ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இவரது குடும்பமும் சூழலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வீரமுனை ஆலயமொன்றின் மதகுருவான இவருக்கு வயது 65. கடந்த 4ஆம் திகதி இவ்வாலயத்தில் சங்காபிசேகம் இடம்பெற்றது.
ஆதலால் சங்காபிசேகத்திற்கு சென்ற பக்தர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து வீரமுனை ஆலயமுன்றலில் பரவலாக அன்ரிஜன் மற்றும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.