சம்மாந்துறை அன்சார்.
மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் டிக்டொக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் அமைப்பினரின் வீடியோக்களையும் படங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை முல்லைதீவைச் சேர்ந்த தற்போது ஹட்டனில் வசிக்கும் 25 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் தொலைபேசியில் சோதனையிட்டபோது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல செய்தி உள்ளடக்கங்களை அவர் தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் இதுபோன்ற விடையங்கள் பகிரப்படுவதைக் கண்காணிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) ‘சைபர் ரோந்து’ என்ற சிறப்புப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை வெளியிடுவது, பகிர்வது அல்லது அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.