Ads Area

றிசாத்துக்கு ஆதரவாக கல்முனை மாநகர சபையில் கருப்பு சால்வை போராட்டம்.

நூருள் ஹுதா உமர்.

அண்மையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சகலரும் கருப்புச்சால்வை அணிந்து தமது எதிர்ப்பை இன்று சபை அமர்வில் வெளிக்காட்டினர். 

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (28) மாலை சபா மண்டபத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப்பின் தலைமையில் கூடிய போதே இவ்வெதிர்ப்பை வெளிக்காட்டினர். கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பீ. எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப், எ.சீ.எம். முபீத், ஏ.ஆர். பஸீரா, ஏ.சமீனா ஆகியோர் சால்வை அணிந்து எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன் முதல்வர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், தேசிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினரும் கருப்பு பட்டி அணிந்து கைதுக்கு எதிரான மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்திற்க்கு தமது ஆதரவை வெளிக்காட்டினர். 

கைது தொடர்பிலான கண்டன உரைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம். முபீத், பி.எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப் ஆகியோர் நிகழ்த்தினர். மேலும் முதல்வர் உட்பட பல உறுப்பினர்களும்,  விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது கண்டனங்களை தெரிவித்தனர். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe