Ads Area

மாநகரில் அனாதையாக இறந்த ‛மாநகர காவல்' பட இயக்குனர்: உடலை எடுத்து உதவி செய்த ‛மாநகர காவல்'

சென்னை : 

விஜயகாந்த் நடிப்பில் ‛மாநகர காவல்' என்ற வெற்றி படத்தை தந்த இயக்குனர் எம்.தியாகராஜன், சென்னை மாநகர தெருக்களில் அநாதையாக அலைந்து திரிந்து கவனிப்பாரின்றி இன்று(டிச.,8) இறந்து கிடந்தார். அவரது உடலை ‛மாநகர காவல்' துறையினர் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர காவல் என்ற பெயரில் படம் எடுத்த இயக்குனரை திரையுலகினர் கைவிட்ட நிலையில் மாநகர காவல் துறையே கடைசியில் உதவி செய்தது தற்செயலாக அமைந்தது.

பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி', ‛பொண்ணு பார்க்க போறேன்', ஏ.வி.எம்.ன் 150வது படமான விஜயகாந்த் நடித்து வெளியான ‛மாநகர காவல்' ஆகிய படங்களை இயக்கியவர் எம்.தியாகராஜன். இன்று அதிகாலை சென்னையில் ஏ.விஎம்.எம். ஸ்டுடியோ எதிரிலேயே தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். சினிமா தொடர்புடைய டிஎப்டி(DFT) படித்த இவர், ஆரம்பகாலத்தில் சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று பின் அதிலிருந்து மீண்டு சினிமாவில் படங்கள் இயக்கினார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி, மாநகர காவல் என இரு படங்களை இயக்கினாலும் அதன்பின் அவரால் சினிமாவில் சோபிக்க முடியவில்லை.

வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி என அவர் படம் கொடுத்திருந்தாலும் நிஜ வாழ்வில் அவர் வெற்றி மேல் வெற்றி பெறாதது சோகம் என்றாலும் இப்படி அனாதையாக இறந்து கிடந்தது பெரும் துயரம் என்றே சொல்லலாம்.

இவரின் மறைவு குறித்து இணை இயக்குனர் நீலன் கனிஷ்கா என்பவர் சமூகவலைதளத்தில், ‛‛சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து, மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலமின்றி வேறென்ன..?


"நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...!!!''


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe