பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
மருதமுனை பிரதேச வைத்தியசாலையும் பாலமுனை பிரதேச வைத்தியசாலையும் கோவிட் நோயாளர்களின் பராமரிப்பு சேவையிலிருந்து பொது வைத்திய சேவைக்கு மீள மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
கொரோனா நோயாளர் பராமரிப்பு சேவையில் முற்றுமுழுதாக தன்னை அதிகம் ஈடுபடுத்தி வெற்றிகரமாக தேசிய நெருக்கடியின் போது அனைத்தின, மத, பிரதேச வேறுபாடுகளின்றி எல்லா இலங்கை நாட்டு மக்களுக்கும் தனது சிறந்த சேவையை வழங்கி இந்த தொற்றுநிலை குறைந்திருக்கின்ற இத்தருணத்தில் புத்தாண்டிலிருந்து தனது சாதாரணமான மருத்துவ, வைத்திய சேவையை வழங்குவதற்கு இந்த இரண்டு வைத்தியசாலைகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் கோவிட் நோயாளர்களுக்காக இயங்கிய அவ்வைத்தியசாலைகள் தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது.
மருதமுனை வைத்தியசாலை இன்னுமொரு இடத்தில் இடம்பெயர்ந்து தனது சேவையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
பாலமுனை வைத்தியசாலையும் அப்படித்தான் மனநோய்க்கான உள சிகிச்சைப்பிரிவில் தனது கடமையை வழங்கிக் கொண்டிருந்தது.
இனி அவர்களுடைய நிரந்தர வைத்தியசாலைகளில் அந்த பொது சிகிச்சைகளை வழங்குவார்கள். பொது மக்கள் அங்கு வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டார்.