தெய்வம் கொடுத்தால் கூரையை உடைத்து கொண்டு கொடுக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி போலவே மனிதனுக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது.
மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒரு சிலரைத்தான் வந்தடையும். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்தவருக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. அதை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினகர். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த கொரோனா காலத்திலும் அவர் அங்கு கடுமையாக உழைத்து குடும்பத்துக்கு வருமானம் ஈட்டி வந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்கலாம். பரிசு விழுந்தால் ஜாக்பட்தான் என்று நினைத்து பலரும் ஆன்லைனில் லாட்டரி வாங்குவார்கள்.
இதேபோல் தினகருக்கும் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. 'பரிசு விழுந்தால் நமக்கு லக்தான்' என்று நினைத்து தினகர் குலுக்கல் லாட்டரி டிக்கெட் வாங்கினார். லாட்டரி சீட்டு குலுக்கல் நாளில் ரிசல்ட்டை பார்த்த தினகருக்கு இன்ப அதிர்ச்சி கார்த்திருந்தது. ஆம்.. அவருக்கு லாட்டரி சீட்டு பரிசு விழுந்து விட்டது.
கட்டிட தொழிலாளி தினகர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஐக்கிய அரபு அமீரக மதிப்பில் 1 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி ஆகும். தனக்கு பரிசு விழுந்ததை அறிந்து தினகர் ஆனந்தத்தில் துள்ளி குதித்து விட்டார். இது தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளிக்கு உதவி லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு விழுந்தது குறித்து தொழிலாளி தினகர் மகிழ்ச்சி பொங்க கூறுகையில், '' வாங்கிய முதல் லாட்டரியிலேயே ரூ.20 கோடி பரிசு கிடைத்ததால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளேன். இந்த பரிசு தொகையை வைத்து எனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளேன். மேலும், அங்குள்ள அரசு பள்ளிக்கும் தேவையான உதவிகளை செய்ய உள்ளேன்' என்று தெரிவித்தார்.