Ads Area

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற 14வது பொதுப்பட்டமளிப்பு விழா.

 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்  திங்கட்கிழமை (7) சிறப்பாக ஆரம்பமானது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்று (7) சம்பிரதாயபூர்வ ஆலவட்ட நிகழ்வுடன் ஊர்வலமாக ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்படி நான்கு நாட்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன்,  எட்டு அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இப்பொதுப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமான 2,621 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

1 ஆம் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் பீடத்தினைச்சேர்ந்த 475 பேரும் 2ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச்சேர்ந்த 219 பேரும், 3ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச்சேர்ந்த 348 பேரும், 4ஆம் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச்சேர்ந்த 329 பெரும், 5ஆம் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச் சேர்ந்த 313 பேரும், 6ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச்சேர்ந்த 277 பேரும் 7 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச்சேர்ந்த 348 பேரும், 8 ஆம் அமர்வில் கலை, கலாசாரபீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

அத்துடன், 4 பேர் முதுதத்துவமானிப்பட்டங்களையும், 23 பேர் வியாபார நிருவாக முதுமானிப்பட்டங்களையும், 2 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெறவுள்ளனர்.

இதேவேளை, இப்பொதுப்பட்டமளிப்பு விழாவில், பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகிய இருவருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் முதல் நாள் நிகழ்வில் இணையவழியூடாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

ஏனைய அதிதிகளான உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, றுகுணு பல்கலைக்கழக பேராசிரியர் காமினி சேனனாயக்க (முன்னாள் உபவேந்தர்) ஆகியோரின் சிறப்புரைகளும் அடுத்த நாள் நிகழ்வுகளில் இடம்பெறவுள்ளன.

அத்துடன், விழாவிற்கு வருகை தரும் பட்டம் பெறும் மாணவர்கள் குறைந்தளவு குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தருமாறும், அனுமதி அட்டை, கொவிட் தடுப்பூசி அட்டை என்பவற்றுடன் வருகை தருவோர் மட்டுமே பட்டமளிப்பு விழா வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவரெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe