Ads Area

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி, மத்திய முகாம் பிரதேசங்களுக்கு ஜனாஸா கட்டில், சந்தூக் வழங்கி வைப்பு.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் சாளம்பைக்கேணி மற்றும் மத்திய முகாம் பிரதேசங்களுக்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில்கள் மற்றும் ஜனாஸாக்களை சுமந்து கொண்டு செல்லும் சந்தூக் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று குறுகிய காலத்திற்குள் இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம் சாளம்பைக்கேணி 6ஆம் கொளனி பிலால் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் மற்றும் சந்தூக் என்பனவும் மத்திய முகாம்-3 முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் ஒன்றும் அவற்றின் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வுகளில் ரஹ்மத் மன்சூருடன், பிரமுகர்கள் பலரும் பவுண்டேஷன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவரது மனித நேயமிக்க உயரிய சேவைகளுக்காக குறித்த பள்ளிவாசல்களின் நிர்வாகிகளினால் நன்றி தெரிவிக்கப்பட்டு, துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

தமது பவுண்டேஷனின் இவ்வாறான சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யூ.எம்.ஏ. (YWMA) அமைப்புக்கு இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்ட ரஹ்மத் மன்சூர், இதற்கு முன்னதாக கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் ஒலுவில் போன்ற பிரதேசங்களுக்கும் இவ்வாறு ஜனாஸா நலன்புரிக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe