பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, மருதமுனை காரைதீவு, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை அடையாளங்காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேற்று (31) மதியம் காரைதீவு விசேட பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 22 வயதுடைய இளைஞன் கைதானார்.
இவ்வாறு கைதான இளைஞனை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய குறித்த கைதான சந்தேக நபரிடமிருந்து இதுவரை 15 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.