தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை (12) பயங்கரவாத மற்றும் கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சலே பின் இப்ராஹிம் அல்-ஓரைனி மற்றும் காலித் பின் இப்ராஹிம் அல்-ஓரைனி ஆகிய இரட்டைச் சகோதர்களும் அடங்குவர் என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சனிக்கிழமையன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 81 குற்றவாளிகளில் தங்களது தாயைக் கொடூரமாக கொலை செய்து, தந்தையை கடுமையாக தாக்கி மற்றும் மற்றைய சகோதரர் ஒருவரையும் கத்தியால் குத்திய குற்றச் செயலுக்காக இரட்டை சகோதரர்கள் இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட குறித்த இரு சகோதரர்களும் பயங்கரவாத (ISIS) சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டதாகவும் இதனை பெற்றோர் கடுமையாக எதிர்த்தமைக்காக அவர்கள் காபிர்களாகி விட்டார்கள் எனக் கூறிய இவர்கள் தங்கள் தாயைக் கொலை செய்து தந்தையையும் தாக்கியுள்ளனர்.
கடந்த மே 24, 2016 அன்று, புனித ரமலான் மாதத்தில், குறித்த இரட்டை சகோதரர்களும் தங்களது தாயைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாது, தந்தையைக் கொல்ல முயன்றும், மற்றும் ரியாத்தின் அல்-ஹம்ரா பகுதியில் வசித்து வந்த தங்களது மற்றொரு சகோதரரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
சவுதி அரேபிய குற்றவியல் நீதிமன்றம், தாயைக் கொடூரமாகக் கொன்றது மற்றும் பயங்கரவாத சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டது உட்பட பல குற்றங்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் உயர் நீதிமன்றங்கள் மரண தண்டனையை உறுதி செய்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.