"ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வி - 2022" எனும் தொணிப்பொருளில் சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட 14 பாடசாலைகளில் சுமார் 250க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புது வருட அப்பியாச கொப்பிகள் சமூக சேவையாளர் விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களால் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வுகளில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட அஸ்மி யாசீன் அவர்களால் மொழியப்பட்ட கருத்துக்களாக,
எம் முன்னோர்கள் கல்வி கற்க பலதடைகள் இருந்தன ஆனால் தற்போதுள்ள சந்ததிகளுக்கு அவ்வாறான தடைகள் இல்லை. இலவச கல்வி, இலவச சுகாதாராம், இலவச பாடப்புத்தகம், இலவச மதிய உணவுகள் என்பன வழங்கப்படுகின்றன. இவற்றைத் தாண்டி தேவையுடைய மாணவர்களுக்கு எம்மைப் போன்றவர்களால் மாணவர்களுக்கு இவ்வாறான அப்பியாச கொப்பிகள் வழங்கப்படுகின்றன. எனவே எதிர்கால சந்ததிகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அவ்வாறு கல்வி கற்காமல் நடமாடுவார் எனில் மரணித்த உடலிற்கு சமமாவார். ஆகவே இம்மண்ணில் கல்வி கற்க முயற்சிக்காதவர்கள் மண்ணின் மேல் இருக்கும் மரணித்த உடல்களாகும்.
இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கின்றோம். இச்சவால்களை எதிர்கொள்ள வேண்டுமாயின் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். எவ்வாறு அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் வேறு பிரித்து அறிகின்றதோ அதே போல்தான் கல்வி கற்றால் தான் நன்மை எது தீமை எது என வேறு பிரித்து அறிய முடியும்.
பொருளாதார சிக்கலினால் இன்றைய இளைஞர்கள் போதைக்கும், களவிற்கு அடிமைப்பட்ட சமூகமாக இருப்பது எதிர்கால சந்ததிகளுக்கும் ஊருக்கும் சீர்கேடு. முறையான நடைமுறைகள் இன்மையினால் இன்று இளைஞர்கள் போதை எனும் பாதாள உலகிற்குள் சிக்குண்டுள்ளனர். இவர்களை மீட்க பெற்றோர்கள், சமூக சேவையாளர்கள், பாடசாலை நிர்வாகாங்கள் என அயராது பாடுபட வேண்டும் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்க்கொள்ளும் போது எனது முயற்சியும், பங்களிப்பும் கட்டாயம் கிடைக்கும் என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் இந்நிகழ்வுகளில் ஓய்வு பெற்ற அதிபர் நிசார்டீன் சேர், பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் மஜீட், ATI கணக்காளர் ஜிப்ரி, முன்னாள் தென் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் தையூப், தேசிய சேமிப்பு வங்கி முன்னாள் முகாமையாளர் மன்சூர் மற்றும் OCD அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-அஷ்கி அஹமட்-