இம்டாட் இஜாஸ்.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடிவில் அறபா நகரானது இயற்கை எழில் மிகுந்த அழகிய கிராமம் என்றாலும் இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
நீர், மின்சாரம், மலசலகூடம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளினை நிவர்த்தி செய்ய முடியாத வறுமை நிலையிலேதான் அப்பிரதேச மக்கள் காணப்பட்டனர்.
இந் நிலையிலேதான் முந்நாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ILM. மாஹிர் அவர்களின் அயராத முயற்சியினால் இப்பிரதேச மக்களின் நீண்டகால அடிப்படை தேவைகளாக இருந்த நீர் வசதி, மலசல கூடவசதிகள் என்பன அப்பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதோடு, அப்பிரதேசத்தில் வாழ்கின்ற சிறார்களின் எதிர்கால நலன்கருதி கம்பீரமாக காட்சியளிக்கும் அல்ஹாஜ் பாரூக் பாலர் பாடசாலையும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு அரச அனுசரனையும் இல்லாத ஒரு சூழலில் தனது குடும்ப உறவினர்களுக்கான நிலையான தர்மமாக (சதகதுல் ஜாரியாவாக) இப்பாலர் பாடசாலையினை அவர் நிர்மாணித்து கையளித்திருக்கின்றார்.
அது மாத்திரமன்றி வறுமையின் காரணமாக மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகாதிருக்க புலமைப்பரிசில் களையும் மாதந்தோறும் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றார். கற்றல் உபகரணங்களான புத்தகம், கொப்பி, புத்தகப்பை போன்ற அடிப்படை தேவைகளும் மாணவர்களுக்கு நிவர்த்தி செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.
பாலர் பாடசாலை நிர்மானம் மாத்திரமின்றி அதற்கான நவீன தளபாட வசதிகள், ஆசிரியைக்கான மாதாந்த கொடுப்பனவு என்பவற்றையும் மனமுவந்து பொறுப்பேற்றிருந்தார். இப்பாலர் பாடசாலையினை பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதற்காக, (Early Childhood Development Officer) என்ற வகையில் இன்று அவரால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கிவைக்கும் நிகழ்வொன்றில் நான் அழைக்கப்பட்டிருந்தேன். என்னோடு (Divisional Child Protection Officer) Mr. M.H. வஹாப் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
கௌரவ ILM. மாஹிர் அவர்களின் இப்பாரிய முயற்சியினால் இறைவன் துணையோடு இப்பிரதேசம் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் கல்வியில் எழுச்சிபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.