Ads Area

சவுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த வாடிக்கையாளர் தடுத்து நிறுத்தம் - கொந்தளித்த மக்கள்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள பிரஞ்சு உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரையும் அவரோடு தோப் (சவுதி அரேபிய ஆண்கள் அணியும் கலாச்சார ஆடை) அணிந்து வந்த ஆண் வாடிக்கையாளர் ஒருவரையும் உணவகத்தினுள் நுழைய உணவக ஊழியர்கள் அனுமதிக்காத நிகழ்வு ஒன்று சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் இரண்டு புனிதத் தலங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றது இதுவே முதன்முறையானதாக கருதப்படுகின்ற வேளை இந் நிகழ்வு அவ் உணவகத்தின் பல வாடிக்கையாளர்களை வருத்தமடையச் செய்துள்ளதாகவும் அமைந்துள்ளது.

குறித்த இவ்விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியாவில் உள்ள பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக அந்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இஸ்லாமிய நாடு ஒன்றில் இஸ்லாமிய கலாச்சார ஆடையணிய தடையா...?? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த ஒருவர்,

"இந்த உணவகம் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு தகுதியானது என்று நான் நினைக்கவில்லை." ஏனெனில் இவர்கள் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிப்பதில்லை, ஆண்கள் சவுதி கலாச்சார ஆடைகளை அணிய அனுமதிப்பதில்லை. அவர்களை ஜித்தாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். எங்கள் மதத்தை அவர்கள் அவமரியாதை செய்வது எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் தனது சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த உணவகத்தினரை ஜித்தாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நமது கலாச்சாரம் மற்றும் மதத்தை அவமதிக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக வளைகுடா பிராந்தியத்தில் ஹிஜாபி அணிந்து வரும் பெண்களுக்கு உணவகங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பஹ்ரைனில் உள்ள பிரபல இந்திய உணவகம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் அரசால் மூடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe