எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், டீசல் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தேசபிரியாவின் ஆலோசனைக்கமைய பெற்றோலிய கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீலின் மேற்பார்வையில் ஓட்டமாவடி தியாவட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இன்று சனிக்கிழமை வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவிலிலுள்ள 13 விவசாயக் கண்டங்களிலிருந்து தலா ஒரு விவசாயக்கண்டத்திலிருந்து 10 பேர் வீதம் 130 விவசாயிகளில் ஒருவருக்கு 25 லீற்றர் வீதம் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கென வைக்கப்பட்டிருந்த 3307லீற்றர் டீசல் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
டீசல் விநியோகிக்கும் வேளையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பன்டார, வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த டீசலை வழங்கி வைத்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதுடன், இராணுவத்தினாரால் விவாசாயிகளுக்கு டீசல் பெறுவதற்கான பாஸ் வழங்கப்படுகின்றது.