முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்த நிலையில், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அவரை வரவேற்க அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.
மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
விமான நிலையம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் ஏற்கனவே சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை அரசாங்கம் தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.