மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் முதலாவது உலகக் கோப்பை போட்டி என்பதால் இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு பஹ்ரைனை தவிர அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்களும் வந்திருந்தனர். கடந்த காலங்களில் தீவிரமான மோதல்போக்கை கடைப்பிடித்துவரும் செளதி அரேபியா சார்பில் அதன் இளவரசர் முகமது பின் சல்மான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
2010ஆம் ஆண்டு ஃபிபா செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பில் உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. வாக்கெடுப்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை கத்தார் தோற்கடித்திருந்தது. அப்போது முதலே உலக கோப்பை போட்டிகளை நடத்துவதை மிகப்பெரிய பெருமைக் கத்தார் அரசு கருதியது. மற்றொரு புறம் அந்நாட்டின் மீதான விமர்சனங்களும் எழத் தொடங்கின.
லஞ்சம் கொடுத்துதான் இந்தப் போட்டிக்கான உரிமையை கத்தார் பெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விசாரணையில் அது நிரூபிக்கப்படவில்லை.
அதன் பிறகு தன்பாலின சேர்க்கைக்கு தடை, கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, மதுபானங்களுக்குக் கட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக கத்தாருக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் அணி உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாகப் பங்கேற்றுள்ளது.
அந்த அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், போட்டியை நடத்துவதையே மிகப்பெரிய பெருமையாகப் பார்க்கிறது. தொடக்க விழாவில் கத்தார் மன்னரின் உரையில் அந்தப் பெருமை தென்பட்டது.
thanks-bbc