தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடிகளை பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
எங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன், எம்.ஏ.சுமந்திரனை நோக்கி கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று - சிவநேசத்துரை சந்திரகாந்தன், மக்களுக்கு சேவையாற்றாமல் ஊழல்களில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சாணக்கியனின் குற்றச்சாட்டை மறுத்து கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தம்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
அத்துடன், இராசமாணிக்கம் சாணக்கியனின் பெயரை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாற்றி பிழையாக அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.இதனையடுத்து இருவருக்கும் இடையியே கருத்து மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
thanks-ibctamil