பாறுக் ஷிஹான்
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க பொலிஸ் ஆலோசனைக் குழுவினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் இலங்கை பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லவுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இணைந்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஆரம்பமானதுடன், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க யுத்த காலங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் சேவைகளில் பல்வேறு பதவிகளில் சேவையாற்றி அப்பகுதி மக்களுடன் நல்லுறவுகளைக் கட்டியெழுப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

