பாறுக் ஷிஹான்
போதைப்பொருட்களுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத்தகவலொன்றிற்கமைய கடந்த திங்கட்கிழமை (12) இரவு முந்திரியடி வீதியில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.சம்சுதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.மேகவர்ண உள்ளிட்ட குழுவினர் மேற்குறித்த சந்தேக நபர்களை மாறு வேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.
இதன் போது சந்தேக நபர்கள் வசமிருந்து ஒரு தொகுதி கஞ்சா, ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளர்.
குறித்த சம்பவத்தில் சுமார் 19, 25, 19, 30, வயதுடைய இளைஞர்களே கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் 19 வயது சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்துடன், சாய்ந்தமருதுப் பகுதியில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டோர் அதிகரித்து வருவதுடன், போதைப்பொருள் மற்றும் சமூகச் சீர்கேடான சம்பவங்கள், சட்டவிரோத புறா வளர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கெதிராக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கெதிராக நடவடிக்கையெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

