யூ.எல்.எம்.முபீன்.
காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம்.
நேற்று 16.10.2023ம் திகதி மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்ளிவாயலுக்குக் ஒதுக்கப்பட்ட காணியில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்ற பாரம்பரிய 400 வருடங்கள் பழமையான மரம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பள்ளிவாயலின் நிர்வாகிகளின் சம்மதமின்றி ஒரவஞ்சனையாக தறிக்கப்பட்டமைக்கு காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.
மரத்தின் குறித்த ஒரு சிறு பகுதி சிதைவடைந்த நிலையில், சிதைவடைந்த பகுதியை மட்டும் அகற்றுவயற்கு பள்ளிவாயல் நிர்வாகம் சம்மதித்த நிலையில் அதற்கு மாற்றமாக இம்மரத்தை முழுமையாக அகற்றுவதற்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளரும் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்தமையையிட்டு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலை கொள்கிறது.
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸ்லாம் பள்ளிவாயலுக்கு ஒதுக்கப்பட்ட காணியை கபடத்தனமாக அபகரிக்கும் நீண்ட நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மரத்தறிப்பு நடந்தேறி இருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை (12.10.2023) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இம்மரத்தை முழுமையாகத் தறிக்கும் வகையில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு தமது பலமான எதிர்ப்பை பள்ளிவாயல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ம்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் இம்மரத்தை முழுமையாகத் தறிப்பதற்கான எந்தத்தேவையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன், சிதைவடைந்த பகுதியை மாத்திரம் அகற்றி மரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அனர்த்தத்திற்குப் பொறுப்பான இவ்வுயரதிகாரியின் நிபுணத்துவம் வாய்ந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதேச செயலாளர் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் அவ்வதிகாரியோடு கடுமையாக முரண்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிவாயல் நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவப் பிரதிப்பணிப்பாளர் மற்றும் இன்னும் சிலர் இம்மரத்தை முழுமையாகத் தறிக்கத்தேவையில்லை என்று உறுதியாகக்கூறிய போதும், இவ்விடயம் தொடர்பில் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு அக்கூட்டத்தின் பின் அனுப்பிய கடிதத்தில் மரத்தைதறிக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பொய் கூறி பிரதேச செயலாளர் மரத்தைத் தறிக்குமாறு கோரியள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு தடவைகள் முறைப்பாடளிக்க பள்ளிவாயல் சென்ற போதும் முறைப்பாடளிக்கத் தேவையில்லை தாம் இவ்விடயத்தை சுமுகமாக முடித்துத் தருவதாக பொலிஸ் கூறியுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில், பாராளுமன்ற உறுப்பனர் அலிசாகிர் மெளலானாவோடும் பள்ளிவாயல் நிர்வாகம் தொடர்பு கொண்டு மரத்தைப் பாதுகாக்குமாறு கோரிய போது, அவர்கள் பொலிஸ் உள்ளிட்ட தரப்புகளோடு பேசி மரம் தறிக்கப்படாதென தமக்கு உத்தரவாதம் வழங்கியதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதும், இன்று மரம் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு முன்பாக அடாத்தாகத் தறிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசியல்வாதி ஒருவரின் சண்டியர்களின் பக்க பலத்துடன் இக்கைங்கரியம் நடந்தேறியுள்ளது.
பொலிசார் மரம் தறிக்கும் போது லேடனுக்கு பார்த்துக் கொண்டு இருந்ததாக பள்ளிவாயல் நிர்வாகாகள் மேலும் தெரிவித்தனர்.
இம் மரம் தறிப்பிற்குப் பின்னால் இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள நிலத்தை அபகரிப்பதே இவர்களின் நோக்கமென சந்தேகமுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு கள்ளியங் காட்டில் அமைந்திருந்த பள்ளிவாயல் உடைக்கப்பட்டு பிரம்ம குமாரிகள் தியான மண்டபம் கட்டப்பட்டதைப் போன்ற அச்சம் முஸ்லிம் மக்களுக்குள்ளது.
1942ம் ஆண்டு பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் பிரகாரம் இன்று தறிக்கப்பட்ட மரத்தித்திற்கு நேராக வின்சன்ட் பாடசாலைக்கு முன்பாக இதே மாதிரி மரம் ஒன்று நின்றுள்ளது. அதனைத்தறித்து அந்நிலம் பாடசாலைக்குத் தேவையான முறையில் மயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதி விஸ்தரிப்புக்கென மூன்று தடவைகள் பள்ளிவாயலின் காணி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டதாக பள்ளிவாயல் தெரிவிப்பதுடன், இறுதியாக வழங்கப்பட்ட போது அது தொடர்பில் லத்தி அபிவிருத்தி அதிகார சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்ததாகவும் அவ்வொப்பந்த பிரதியொன்றை தமக்கு வழங்குவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை லாக்களித்த போதும் இதுவரை அவ்வொப்பந்த பிரதி வழங்கப்படவில்லை எனத்தெரிய வருகிறது.
மேலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு முன்பான வீதி அபிவிருத்தி தொடர்பில் கொழும்பு தலைமையக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடலுக்கு மாற்றமாக பள்ளியின் முன்னாலுள்ள வீதி அபிவிருத்தித்திட்டம் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
அதாவது, முன்பிருந்த சுற்றுவட்டத்தை மாற்றி பாடசாலைக்கு போக்குவரத்து நெருக்கடி எற்படும் விதத்தில் அதனை அமைத்து பள்ளிவியலுக்கு நெருக்கடி கொடுத்து பள்ளிக்கு முன்பாகவுள்ள காணியை கையகப்படுத்தும் வகையில் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டதாக பள்ளிவாயல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி நிரலின் அடுத்த நகர்வே இம்மரம் முழுமையாக அகற்றப்பட்டதன் நோக்கமென எமது தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் கருதுகிறது.
மேலும், மரம் தறிக்கப்பட்டதன் பின்னால் பள்ளிவாயலின் தலைவரிடம் மரம் தறிக்கப்பட்டமைக்கான சம்மதத்தை வழங்குமாறு வற்புறுத்தி மட்டக்களப்பு பொலிசார் கையொப்பத்தை பெற்றுக்கொண்டதாகவும் தான் உயிரச்சுறுத்தலுக்கும் பயந்து விருப்பமின்றி கையொப்பத்தை வைத்துக் கொடுத்தாக தங்களுக்கு பள்ளிவாயலின் தலைவர் தெரியப்படுத்தியதாக நிர்வாகிகள் கூறியதோடு, எங்கள் யாருக்கும் தெரியாமல் தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டமைக்கு தமது பலமான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
தற்போதைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரே ஆரயம்பதி பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது முஸ்லிம் மக்களின் பாரம்பரியக் காணிகளை தேடித்தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வழக்குத்தாக்கல் செய்து அந்த ஏழை முஸ்லிம் மக்களை இன்றுவரை நீதிமன்ற படிகளில் ஏறி இறங்க அலைய விட்டவர் என்பதை இவ்விடத்தில் ஞாபக மூட்டுவதோடு இவ்வாடாத்தான செயலை வண்மையாகக் கண்டிக்கின்றோம் என காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
படம் - சசி