(பாறுக் ஷிஹான்)
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 கணக்கெடுப்புக்கான முன்னரான நிரற்படுத்தும் பணியின் தேசிய மட்டப்பயிற்சிச் செயற்பாடுகள் கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடுகளை உடனடியாகத் துரிதப்படுத்தும் நோக்குடன் கடந்த 3 தினங்களாக பல்வேறு துறைகளிலுள்ள உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு இறுதியாக குடிசன கணக்கெடுப்பு நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 12 வருடங்களின் பின் 2024ம் ஆண்டு இக்கணக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை வழமையாக படிவங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்படமாட்டாதெனவும் அதற்குப் பதிலாக டப்லட் கனணிகளின் மூலம் கெப்பி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் தங்களது பூரண பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் புள்ளிவிபரத்திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி.அநுர குமார தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இதற்கு முன்னோடியாக கல்முனை பிரதேச செயலக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எல்.சுப்ஹானின் வழிநடாத்தலின் கீழ் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பயிற்சிச் ச்செயலமர்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.