சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் முஹம்மட் ரிஸ்விகான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும், அவர் நிரபராதி எனவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையில் 45 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட கட்டிட நிர்மாணத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அப் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் முஹம்மட் ரிஸ்விகான் பாடசாலையின் முன்னாள் அதிபர் மீது சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்களங்களில் முறைப்பாடுகள் செய்திருந்தார்.
இதனால் பாடசாலையின் முன்னாள் அதிபருக்கும் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக பாடசாலையின் முன்னாள் அதிபரினால் நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் முஹம்மட் ரிஸ்விகானுக்கு எதிராக பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் தீர்ப்பானது பல்வேறு கட்ட விசாரனைகளுக்குப் பின் கடந்த வாரம் ((24/01/2024) வெளியாகியிருந்தது.
இதில் சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் முன்னாள் அதிபரினால் அப்பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் முஹமட் ரிஸ்விகான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை எனவும், ஆதாரமற்ற பொய்யானவை எனவும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியினால் தீர்ப்பளிக்கப்பட்டு முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் முஹமட் ரிஸ்விகான் நிரபராதி என அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தகவல்
முஹம்மட் ரிஸ்விகான்,
முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர்,
சது.ஜமாலியா வித்தியாலயம்.