பாறுக் ஷிஹான்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தெரிவித்தார்.
வட, கிழக்கு சமாதான நீதிபதிகள் சபை இலங்கையின் 76வது சுதந்திர தின வைபவத்தை சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை (4) கொண்டாடியது.
இதில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு பேசிய போது பொறுப்பதிகாரி சம்சுதீன் மேலும் தெரிவித்தவை,
வருமாறு இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் இலங்கையர்களாக எல்லோரும் செயற்பட்டு பெற்ற சுதந்திரத்தைதான் இன்று கொண்டாடி கொண்டிருக்கிறோம். இது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்த பெற்ற சுதந்திரம்.
நாட்டுக்கு கிடைத்த சுதந்திரத்தை எல்லா மக்களும், எல்லா பிரதேசங்களும் அனுபவிக்க வேண்டும். நான் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடந்த இரு வருடங்களாக சேவையாற்றி வருகின்றேன். இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை அதிகமாக காணப்பட்டது.
பாரிய சவால்களுக்கு மத்தியில் நாம் இப்பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்று முறியடிப்பு நடவடிக்கைகளில் சாதித்துள்ளோம். சட்டம் அதன் கடமை செய்தது, அண்டிய இடங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
சமாதான நீதிபதிகளின் சேவைகள் மதிப்பானவை, மகத்தானவை. நீதியாகவும், நேர்மையாகவும் சமாதான நீதிபதிகள் சமூகத்தின் கௌரவப் பிரஜைகள். சமூகத்துக்கு உச்சபட்ச சேவைகளை வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.