பாறுக் ஷிஹான்.
இயந்திரமின்றி இரண்டாக உடைந்த நிலையில் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமற்போயுள்ளது.
இவ்வாறு உடைந்து குறித்த கடற்பகுதியில் காணப்பட்ட எஞ்சிய படகுப்பகுதிகள் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடற்பகுதியில் தொழில் செய்து வரும் மீனவரொருவர் குறித்த படகு உடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதை இனங்கண்டு ஏனையோருக்கு தகவல் வழங்கியதைத்தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் குழுவினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.
மேலும், உடைந்த படகு கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மீனவரொருவருடையதென அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம், வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த படகை கரைக்கு இழுத்து வரும் போது மீனவர்களோ எந்தவித கடற்சாதனங்களோ இருக்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன், படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்கு துறையின்றி மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.