பாறுக் ஷிஹான்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு சந்தைக்கட்டிடத் தொகுதிக்கு முன்னால் இடம்பெற்றது.
இதன்போது சக்தி மீன்பிடி சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கத்தலைவர் கோபால், சிவில் செயற்பாட்டாளர்களான விநாயகம் விமல்நாதன், கணபதிப்பிள்ளை கரிசன், ஆலய தர்மகர்தாக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு, கிழக்கு மற்றும் சர்வதேச நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதனைத் தமிழின அழிப்பு வாரம் எனப்பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புகள் இந்நினைவேந்தலை அனுஸ்டித்து வருகின்றது.
இந்த நிலையில், கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்ட நிலையில், நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.