பாறுக் ஷிஹான்
வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.
வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டை இனவன்முறையினை ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
மேற்குறித்த வழக்கு புதன்கிழமை (19) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.
இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், இனமுரண்பாடுகள், இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவினை பொலிஸார் கோரியிருந்த போதிலும், அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யாது இவ்வாறான கட்டளைகளைப் பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஊடகங்களிடம் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.
செய்திப்பின்னணி
வரவேற்புக்கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை கிராம வீதி வரவேற்புக்கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலையேற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (15) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பணியினை ஆரம்பித்து வைக்க அடிக்கல் நட வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற உத்தரவினை சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வாசித்துக் காட்டியதுடன், அப்பகுதியில் இடம்பெறவிருந்த பதற்ற நிலைமையினைச் சீர்செய்தனர்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வீரமுனை வரவேற்புக்கோபுரம் அமைப்பதற்கெதிராக இரு நபர்களினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதற்கமைய இந்நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபர் மன்றிக்கு சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் சனிக்கிழமை (15) சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்க்குட்ப்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள்ட்பட்ட சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்குச் செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்புக்கோபுரம் அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்துவதனால் தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்க்கு சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தல் மற்றும் சமாதானக்குலைவு ஏற்ப்படக்கூடிய சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளதாலும் இந்நிகழ்வை நடாத்துவது உசிதமானதல்ல என்பதனால் இந்நிகழ்வினை நடத்தாமல் நிறுத்துமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் இராஐ கோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன் உட்பட சிலருக்கு கோபுரம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கமைவாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த இடத்திற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வருகை தந்திருந்தார்.
சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்றத்தடையுத்தரவு வாசிக்கப்பட்டது. இதன் போது இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைதியாக அவ்விடத்தை விட்டுச்சென்றார்.
இதே வேளை, வீரமுனை பிரதேச மக்களினால் குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி கம்பிக்கூடுகள் நாட்டப்பட்டன.
இதனால் முஸ்லிம், தமிழ் இனத்தவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குறித்த இடத்திற்கு பொலிஸ் உயரதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம்.சகீல், பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அவர்களின் சம்மாந்துறைக்கான இணைப்புச் செயலாளர் ஆக்கிப் அன்சார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர் கோவில் நிர்வாகத்தினர், கிராம சேவை உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தவர்களும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் 2024.06.19ம் திகதி காலை 09.00 மணிக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
குறித்த கோபுரம் அமைப்பது சம்பந்தமாக இதற்கு முன்னரும் முயற்சி செய்து அது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டப்படி அனுமதி பெறப்படாமல் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காமலுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.