பாறுக் ஷிஹான்.
ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு புறநகர்ப்பகுதியைச்சேர்ந்த சந்தேக நபரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரப் பகுதியிலுள்ள பிரபல உல்லாச விடுதிக்கருகில் வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து அங்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் சுமார் 9 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைதான நபர் கொழும்பு புறநகர்ப் பகுதியைச்சேர்ந்த 47 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 25 கிராம் 150 மில்லி கிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.