பாறுக் ஷிஹான்.
நாட்டின் பல பகுதிகளில் கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள வாராந்த சந்தைகள், வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன், ஏனைய மரக்கறி வகைகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்த நிலையிலுள்ளதாக பாவனையாளர் கூறுகின்றனர்.
அத்துடன், ஒரு கிலோ கிராம் கரட் 460 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும் இஞ்சி ஒரு கிலோ 3,500 ரூபாவிற்கும் தேசிக்காய் ஒரு கிலோ 1,800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி கடந்த நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் இன்று 500 ரூபாவைக்கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால், மரக்கறிகளின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கேற்ற வகையில் வரத்தில்லாததால் காய்கறி விலை மேலும் உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதை விட தம்புள்ளை மற்றும் நுவரெலியாவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலை போக்குவரத்துச்செலவு உள்ளிட்ட இதர செலவினாலும் இவ்விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விலை சுமையினை நுகர்வோர் சுமக்க வேண்டியிருப்பதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இவ்வாறு மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளமைக்கு சில மாபியாக்களும் இடைத்தரகர்களும் காரணமென பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன், இது தவிர மற்றுமொரு காரணம் சந்தையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் பல பிரச்சினைகள் காரணமாகவே மரக்கறிகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
எனவே, சந்தையில் சில வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தால் மாத்திரமே மரக்கறி விலைகளைக் குறைக்க முடியும்.
அத்துடன், லீக்ஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்புக் காரணமாக நுகர்வோர் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் திடீர் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை இவ்விடயத்தை ஆராய்ந்து விலையைக் கட்டுப்படுத்த உடனடித்தீர்வுகளை வழங்க முன்வர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சில வியாபாரிகள் பழுதடைந்த மரக்கறிகளை குறைந்த விலைகளில் விற்பனை செய்வதுடன், சிலர் புதிய மரக்கறி வகைகள் என அவற்றைக்கூறி அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.
எனவே, இம்மாஃபியாவை முறியடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பொருத்தமற்ற முறையில் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கெதிராக உடனடியாக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.