பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருளை நீண்டகாலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, தாளவட்டுவான் சந்தி அருகில் வெள்ளிக்கிழமை (7) இரவு சந்தேகத்திற்கிடமாக இருவர் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அங்கு சென்ற பொலிஸார் குறித்த இருவரையும் சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துநர்கள் என அடையாளங்காணப்பட்ட இவ்விரு சந்தேக நபர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இரு சந்தேக நபர்களிடமிருந்தும் 3,300 மில்லி கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன், இரு சந்தேக நபர்களும் மத்திய முகாம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
32 மற்றும் 37 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.