(பாறுக் ஷிஹான்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சாய்ந்தமருது என்ற ஊரைப்பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. இன்று நாங்கள் இன்டர்நெட் ஊடாக கூகுள் சாய்ந்தமருது என்ற சொல்லைத் தட்டச்சு செய்தால் உலகிலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ளவர்களுக்கும் தெரியும். இதற்கு காரணம் சாய்ந்தமருது பகுதியில் ஸஹ்ரான் குழுவினர் மறைந்திருந்த செயற்பாடும் அங்கு இடம்பெற்ற தாக்குதலுமாகும் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண குறிப்பிட்டார்.
சிறுவர், பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்களை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அண்மையில் திறந்து வைத்தார். இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சாய்ந்தமருது என்ற ஊரைப்பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. இன்று நாங்கள் இன்டர்நெட் ஊடாக கூகுளில் சாய்ந்தமருது என்ற சொல்லை தட்டச்சு செய்தால் உலகிலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ளவர்களுக்கும் தெரியும். இதற்கு காரணம் சாய்ந்தமருது பகுதியில் ஸஹ்ரான் குழுவினர் மறைந்திருந்த செயற்பாடும் அங்கு இடம்பெற்ற தாக்குதலுமாகும்.
அத்துடன், முஸ்லீம்களினால் ஓதப்படும் குர்ஆனில் எங்கேயாவது தற்கொலை செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
மேலும் சில அடிப்படைவாதிகள் குர்ஆனில் குறிப்பிடப்படாத சில விடயங்களை திணித்து மார்க்க விடயங்களை பிழையாக வழிநடத்த முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இக்குழுவினரிடமிருந்து சிறுவர்கள், இளைஞர்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும்.
மேற்குறித்த நபர்களிடமிருந்து எமது சமூகத்தை நாங்கள் பாதுகாக்க முன்வர வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களைத் தவிர்ப்பதற்காகவே நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையங்களில் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பணியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.