பாறுக் ஷிஹான்.
கொரோனா மையித்துக்கள் எரிக்கின்ற போது நான் நாட்டில் இருக்கவில்லை. ஒரு ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை றவூப் ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
நாங்கள் நாட்டின் நலன்கருதியும் நன்றிக்கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரிக்கின்றோம் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் குறிப்பிட்டார்.
தேசிய காங்கிரஸ் 20வது பேராளர் மாநாடு திங்கட்கிழமை (19) மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்ற வேளை, அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
ஒரு ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை றவூப் ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் நாட்டின் நலன்கருதியும் நன்றிக்கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரிக்கின்றோம். அரசியல் என்பது காலத்தின் தேவை. இன்று பிரதமராக இருந்து ஜனாதிபதித் தேர்தல் கேட்போர் எவரும் இல்லை. வழக்கமாக நான் கூறுவது போன்று பால் போத்தல்கள் உருண்டு ஓடுகின்றது.
இன்று முகப்புத்தக போராளிகளுக்கு அரசியல் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. றிசாட் பதுர்தீன் என்பவர் அரசியலுக்கு நேற்று வந்த பிள்ளை. சொந்தத் தேவைகளுக்கப்பால் அந்தந்த காலங்களில் தலைவர்களைத் தெரிவு செய்தது தேசிய காங்கிரஸ் என்பதை சகலரும் அறிய வேண்டும்.
யுத்தம், கடலலை, சுறாவளி போன்றவற்றை நாம் பார்த்திருக்கின்றோம். அவை அழிவுகள். ஆனால், எரிவாயு, பெற்றோலின்றி வீதியில் அநாதரவாக இருந்த சந்தர்ப்பங்கள் தான் முந்திச்சொன்ன அழிவுகளை விட கொடுமையிலும் கொடுமை. பத்தும் பறக்கின்ற கொடுமை. எத்தனை பெற்றோல் பவுசர்கள் எரிக்கப்பட்டன.
இது தவிர, தேசிய காங்கிரஸ் நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றி எப்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றது.
எப்போதும் உண்மையையே பேசுக்கொண்டு இருக்கின்றோம். அது மாத்திரமன்றி, கொரோனா மையித்துக்கள் எரிக்கின்ற போது நான் நாட்டில் இருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.